Sunday, August 1, 2021

பகுத்தறிவு

 பாற்கடலை கடைய அமுதம் வருமா? - பைத்தியக்காரத்தனம்!


"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்ணுவோட அவதாரமாம். அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.

சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantasy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல. இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க."

இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியைக் கேட்டு விட்டதாகவும் என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர் (பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல)

நான் நிதானமாக சொன்னேன் இந்த கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள் மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை  இவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது

அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும். பொருள் அதுவாகவே விளங்கும். 

சரி,


 இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.


🌼 பாற்கடல் - குண்டலினி சக்தி


🌼 மேரு மலை - முதுகுத்தண்டு


🌼 வாசுகி பாம்பு - மூச்சுக்காற்று (உஷ்.. உஷ் என்று சத்தம் வருதா?)


🌼 தேவர்-அசுரர் - இடகலை - பிங்கலை (நாடி)


🌼 ஆமை - ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் தன்மை


🌼 தொண்டைக்குழி - விசுக்தி


🌼 விஷ்ணு - வாழ்வு


🌼 ஆலகாலவிஷம் - கபம்

🌼 அமுதம் - நித்ய வாழ்வு (மரணமில்லா பெருவாழ்வு)


🌼 திருமகள் - செல்வம், நிறைவு


🌼 சந்திரன் - சித்தத் தெளிவு


🌼 காமதேனு, கற்பக விருட்சம் - நினைத்தது கைகூடும் ஆற்றல்


🌼 ஐராவதம் - தேக பலம்


🌼 தன்வந்திரி - ஆரோக்கியம்

அதாவது "முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை - பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது (இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்).


ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசியோகம் மூலம் இடகலை பிங்கலை வழியே மாற்றி மாற்றி மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்ய பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும். அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.


மேலும் பாற்கடலை கடையும்போது லட்சுமி, தன்வந்திரி, சந்திரன், கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் போன்றவை வந்தது என்பது வாசியோகம் சித்தி பெற்ற ஒருவனுக்கு முறையே செல்வம் (நிறைவு), ஆரோக்கியம், சித்தத் தெளிவு, நினைத்தது கைகூடும் ஆற்றல், தேக பலம் கிடைக்கும் என்பதற்கான உருவகம்.


ஆனால் இந்தப் பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்து விடும் (சந்தேகம் இருப்பின் வாசியோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)."


இப்படி விளக்கினேன். அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்,


 'விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே?!' என்று.


அவர் கிடக்கட்டும். உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு) மேலும் சில உருவகங்களின் Decodings:


1. ஒரே இறைவன் (இஸ்லாம்) - அத்வைதம் (Oneness)


சிவசக்தி - துவைதம் (Duality)


பிதா, சுதன், பரிசுத்த ஆவி - வசிஷ்டாத்வைதம் (கிறிஸ்த்துவம்)


2. சும்மா இருந்தால் சிவம் (Static), ஓயாமல் அசைந்தால் சக்தி (Dynamic), சக்தி இல்லையேல் சிவம் இல்லை - உருவகம்


3. திரிசூலம் - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியின் உருவகம்


4. கணபதியை (பூமியை), சக்தி (Dynamic force)


அழுக்கை (Dust of Universe) உருட்டி படைத்தாள் - இது பூமி தோன்றலின் உருவகம்.


5. தில்லை நடராசர் நடனம் - Cosmic dance-ன் உருவகம் (அறிவியல் ஏற்றுக்கொண்டது).


6. சிவன் (யோக சக்தி) + திருமால் (போகசக்தி)

இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன் - உருவகம்


7. முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமாணமான காலத்தை உணர்த்த மகாகாலன். அதன் எதிர்பரிமாணம் மகாகாளி - உருவகம்


8. பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாக படைத்தது, ஜனனமும் மரணமும்  இறைவனுக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்


9. வாயு மைந்தன் அனுமன் (குரங்கு போன்ற நிலையில்லாத மனம்), யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம் 

- மனதின் உருவகம்


10. கருடாழ்வார் - மூச்சின் உருவகம்


11. சூரியனின் ஏழு குதிரைகள் - நிறப்பிரிகை VIBGYOR உருவகம்


12. தசாவதாரம் - பரிணாம வளர்ச்சியின் உருவகம்


13. ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.


எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு, தான் உணர்ந்ததை உணர்த்த, ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை (தத்துவத்தை) உருவகமாக்கி உணர்த்தினர். 


நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?

Thursday, July 1, 2021

வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து

"மஹாபாரதம்

        உணர்த்தும்,  

             உண்மைகள்.


 சத்தியம் 

    செய்துவிட்டால்

       சங்கடத்தில் 

         மாட்டிடுவாய்

 கங்கை மைந்தானாய்.!


 முற்பகல்  

    செய்யின்

       பிற்பகல்

         விளையும்.

     பாண்டுவாய்.!


வஞ்சனை 

    நெஞ்சில் 

       கொண்டால்

         வாழ்வனைத்தும்

                வீணாகும்.

           சகுனியாய்.!


ஒவ்வொரு 

    வினைக்கும்

       எதிர்வினை

          உண்டு.

     குந்தியாய்.!


குரோதம் 

     கொண்டால், 

        விரோதம் 

           பிறக்கும்.

 திருதராஷ்டிரனாய்.!


பெற்றோர்கள் 

    செய்யும் 

      பாவங்கள், 

        பிள்ளைகளை 

          பாதிக்கும்.

  கௌரவர்களாய்.!


பேராசை 

     உண்டாக்கும், 

        பெரும் 

         அழிவினையே.

  துரியோதனனாய்.!


கூடா நட்பு, 

         கேடாய் 

               முடியும்.

      கர்ணனாய்.!


சொல்லும் 

      வார்த்தை, 

         கொல்லும் 

            ஓர்நாள் .

     பாஞ்சாலியாய்.!


தலைக்கணம் 

     கொண்டால், 

        தர்மமும் 

          தோற்கும்.

    யுதிஷ்டிரனாய்.!


பலம் மட்டுமே, 

     பலன் தராது .

            பீமனாய்.!


இருப்பவர் 

     இருந்தால்,  

         கிடைப்பதெல்லாம்

          வெற்றியே.

    அர்ஜூனனாய்.!


சாஸ்திரம் 

      அறிந்தாலும், 

         சமயத்தில் 

            உதவாது.

    சகாதேவனாய்.!


விவேகமில்லா 

     வேகம், 

        வெற்றியை 

            ஈட்டாது.

    அபிமன்யூவாய்.!


 அண்ணனாலும் 

       அரசனாலும் 

           நீதி தவறாத 

               விதுரனாய்.!


தவமும்

     அவமாய் போன 

          காந்தாரியாய்.!


பிறருக்கு வழிகாட்டி 

தன் மகனின் 

தரம் உயர்த்தா 

துரோணராய்....


சிரஞ்சீவி வரம் பெற்றும்

        சின்னாபின்னமான 

அஸ்வத்தாமனாய்.!


நிதர்சனம் 

உணர்ந்தவன், 

நெஞ்சம் 

கலங்கிடான்.

கண்ணனாய்.!.


வாழ்க்கையும்

ஒரு பாரதம்தான்.!

வாழ்ந்திடலாம்

பகுத்தறிந்து.!🙏🦚

Sunday, June 20, 2021

கீதை காட்டும் பாதை –

 

கீதை காட்டும் பாதை – 

இந்தக் கீதோபதேசம் எல்லோருக்கும் எளிதில் படிக்கவோ, கேட்கவோ கிடைத்து விடுவதில்லை. பகவத் கீதை வேண்டிய அளவு கடைகளிலும், நூலகங்களிலும், இணையத்திலும் கொட்டிக் கிடந்தாலும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்க்கே அதைப் படிக்கும் ஆர்வம் வரும். ஆரம்பித்தவர்கள் எல்லாருக்கும் படித்து முடிக்கும் வரை அதே ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. புண்ணியம் செய்தவர்க்கே அதைப் படித்து முடிக்க முடியும். படித்து முடிப்பவர்களிலும்  சிறிதேனும் அதைப் பின்பற்ற முடிவதோ ஆயிரத்தில் ஒருவராலேயே முடியும். அதுவும் முந்தைய பிறவிகளில் ஆன்மிக முயற்சிகள் தொடர்ந்து எடுத்தவருக்கே சாத்தியப்படும்.


இப்படிப்பட்ட கீதையைச் சொல்லவும் கேட்கவும் கூட அருகதை வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுவதாவது:


இந்த உண்மையை தவமில்லாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், கேட்க வேண்டுமென்ற ஆசையில்லாதவனுக்கும் எப்போதும் சொல்லாதே. என்னை வெறுப்பவனுக்கும் சொல்லாதே!


எவனொருவன் இந்தப் பரமரகசியத்தை என்னுடைய பக்தர்களுக்கு உபதேசிப்பானோ, அவன் என்னிடம் அதிகமாக பக்தி செலுத்தி என்னையே அடைவான். சந்தேகமில்லை.


அந்த பக்தனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்யக் கூடியவன் மனிதர்களில் வேறு யாருமில்லை. அப்படியே பூமியில் அவனைக் காட்டிலும் எனக்கு மிகப் பிரியமானவன் வேறொருவன் இருக்கப் போவதில்லை.


நம் இருவருக்குமிடையே நடந்த இந்த தர்மமான உரையாடலை எவனொருவன் படிப்பானோ அவன் ஞானவேள்வியினால் என்னை ஆராதித்தான் என்றே நான் நினைப்பேன்.


சிரத்தையுடன், பொறாமையின்றி இதை எந்த மனிதன் கேட்கிறானோ அவனும் சகல பாவங்களும் நீங்கப் பெற்று புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை அடைவான். ”


இந்த வார்த்தைகளுக்கு அதிக விளக்கம் தேவையில்லை.  நம்பிக்கையோ, தகுதியோ, பக்தியோ இல்லாதவர்களுக்கு பகவத்கீதையை உபதேசிப்பதில் அர்த்தமில்லை. புரியாத விஷயங்களை, புரிந்து கொள்ளச் சக்தியற்றவனுக்குச் சொல்வதில் ஒரு பலனுமில்லை.


கீதையைத் தகுதியுள்ள நான்கு பேருக்கு எடுத்துச் சொல்பவன் இறைவனுக்குப் பிரியமானவனாகிறான். படிப்பவன் ஆராதிப்பவனாகிறான். கேட்பவன் புண்ணியம் செய்தவனாகிறான்.


முடிவில் பகவான் கேட்கிறார்:

பார்த்தா! நீ மனத்தை ஒருமுகப்படுத்தி நான் உபதேசித்ததைக் கேட்டாயா? உன்னுடைய அஞ்ஞான மயக்கம் நீங்கியதா?

                                                       

அர்ஜுனன் சொல்கிறான்:

அச்சுதா! உன் அருளால் மோகம் அழிந்தது; நினைவு வந்தது; சந்தேகங்கள் நீங்கின; நிலைபெற்றேன்; நீ சொன்னபடியே செய்கின்றேன்.


அதன் பின்

சஞ்சயன் சொல்கின்றான். “இவ்வாறு வாசுதேவனுக்கும், மகாத்மாவான அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அற்புதமான, மயிர்க்கூச்செறிய வைக்கிற உரையாடலை நான் கேட்டேன்”


வியாச பகவானுடைய அருளால் இரகசியங்களுக்குள் உத்தம இரகசியமான இந்த யோகத்தை யோகஸ்வரனான கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் கேட்டேன். இந்த அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


அரசனே அந்த ஹரியினுடைய மிக்க அற்புதமான ரூபத்தை நினைத்து நினைத்து எனக்கு அதிகமான ஆச்சரியம் தோன்றுகிறது. மறுபடியும் மறுபடியும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


யோகேஸ்வரனான கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, காண்டீபத்தைத் தாங்கிய பார்த்தன் எங்கிருக்கிறானோ, அந்த இடத்தில் லக்‌ஷ்மியும், வெற்றியும், நீதியும் நிலைத்திருக்கும் என்பது என் முடிவு.


இந்த உன்னதமான கீதோபதேசத்தை திவ்ய திருஷ்டியால் பார்க்கவும், கேட்கவும் முடிந்த சஞ்சயனின் மனநிலையை நம்மால் உணரமுடிகிறது. அவனைப் போல் மீண்டும் மீண்டும் நினைத்தும், படித்தும் மகிழ்ச்சியடைய எத்தனையோ ஞானப் பொக்கிஷம் இந்தக் கீதையில் புதைந்து கிடக்கின்றது.



’தர்மக்‌ஷேத்ரே” என்று ஆரம்பிக்கும் பகவத் கீதை “மம” என்ற சொல்லில் முடிவடைகிறது. மம என்றால் ‘எனது’ என்று அர்த்தம். முதலும் முடிவுமான வார்த்தைகள் ”தர்மம்” மற்றும் “என்னுடைய” என்பன. அதாவது என்னுடைய தர்மம் என்பதை விளக்கும் நூலாக பகவத் கீதை இருப்பதை சூட்சுமமாக இது குறிப்பதாகவே அறிஞர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது போல நமது தர்மத்தை எல்லாக் கோணங்களிலிருந்தும் உணர்த்தும் நூலாக பகவத்கீதை இருக்கிறது என்பது உண்மையே.   



ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பகவத் கீதை புதுப்புது ஆழங்களை உணர்த்திய வண்ணம் இருப்பதை அடியேன் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நமது ஞானமும், பக்குவமும், விரிவடைய விரிவடைய பகவத் கீதை புதுப்புது அர்த்தங்களுடன் மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அதனால் இது ஒரு முறை படித்து விட்டு மூடிவைத்து விடக்கூடிய நூல் அல்ல.


சந்தேகமும், குழப்பமும், துக்கமும் நிரம்பியிருந்த அர்ஜுனன் இந்த பகவத்கீதையைக் கேட்டு முடிவில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும் பெற்றான். அதே போல வாழ்க்கையில் எந்த நேரத்தில் குழப்பமும், சந்தேகமும், துக்கமும் நம்மை ஆட்கொண்டாலும் தெளிவுக்கும், நம்பிக்கைக்கும் ஆறுதலுக்கும் நாம் ஒவ்வொரு முறையும் இந்தப் பகவத் கீதையை நாடுவோமாக! அந்த நேரங்களில் முழு கீதையையும் மறுபடி நாம் படிக்க வேண்டுமென்பதில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக் கொண்டு ஏதோ ஒருசில பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் நம் அப்போதைய நிலைமைக்கான உபதேசம் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும் என்பதையும், இறைவனால் வழிநடத்தப்படுவோம் என்பதையும் நான் என்  சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்!

Sunday, June 13, 2021

வீரபத்திரர்

 வீரபத்திரர்_யார்?


தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம். 


ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு:- 


தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை. 


அதற்கு பதில் தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார். இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது. 


அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது. ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார். ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும். 


வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள். வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது. இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த 'திருவிளையாடல்' படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது. 


பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான். ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான். 


30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான். திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர். 


விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை. தட்சனின் மகளான தாட்சாயினியும், 'என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்' என்று ஈசனிடம் வேண்டினாள். ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. 'சிவத்தை விட சக்திதான் பெரிது' என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள். 


அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள். தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள். 


தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார். 


அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின. அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார். 


தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நிந்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார். முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார். இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார். அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார். பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன. 


தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன. சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது. அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார். 


அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர். 


தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள். இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது. 


அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இது தான் வீரபத்திரரின் அவதார கதை.


வீரபத்திரரை வழிபட்டால் விவேகம், வீரம் வெற்றிகள் தேடி_வரும்.

Monday, May 31, 2021

சிதம்பர ரகசியம்

 #சிதம்பர_ரகசியம் 


பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?


இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.


முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.


(1) 👉இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).


(2) 👉பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.


(3) 👉மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.


((4) 👉விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).


(5) 👉இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.


(6) 👉திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.


(7) 👉"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,


(8)👉பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.


(9) 👉பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.


(10) 👉சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிரூபித்துக்  காட்டிவிட்டது.


-வரலாற்றுத் தகவல்கள்

நேரத்தின் முக்கியம்

 ஒருவர் முதலில் சிறியதாக 

*மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*.


பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.*


ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது.

*வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.*


வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்.

*ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.*


*ஏன் என்னாச்சு.?*


பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.*


எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?*


நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.*


அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.

 *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.*


அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். 

*அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்*.


அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். 

*சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.*


அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. *குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.*


அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.

*தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.*


அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார். 

*இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.*


சத்தம் இல்லாமல் கதவை மூடினார். *மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.*


*ஐயா* சாப்பிட ஏதாவது வேணுமா.? *பணியால் கேட்டான்.*


வேண்டாம் என்று சொல்லிவிட்டு. 

*அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.*


உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். *இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்*.


பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல். 

*அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.*


கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி. 

இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். *இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.*


அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது. 

*கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?*


யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? *என்று கேட்டார்*.


அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. *உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்*.


*அவர் திடுக்கிட்டுப் போனார்.*


*அய்யாசாமி* நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். *இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.*


அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் *செல்வத்தை* *எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்*.


மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. *அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.*


ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. 

*என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.*

*அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.*


அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 

அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். 

*சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.*


மரண தேவதை ஒப்புக்கொண்டது.

*அவர் இப்படி எழுதினார்.*


உங்களுக்கான நேரத்தை. 

*சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.*


என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.

 *எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.*


இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் *ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*


அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. 

*அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.*


விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். *பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.*


*ஐயா* ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. *பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.*


அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் *மேஜையை பார்த்தார்.*


அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. 

*பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன*


ஆதலால்

தயவுசெய்து வாழ்க்கையை வாழுங்கள்,நொடிக்கு நொடி கொண்டாடுங்கள், பேரானந்தமாக இருங்கள்,மனைவி,குழந்தை,கணவன்,அப்பா,அம்மா,உடன்பிறந்தவர்கள்,நண்பர்கள்,ஆடு,மாடு,கோழி,வயல்வெளி,பூச்செடி இப்படி எல்லாவற்றிற்கும் நிறைய நிறைய நிறைய நேரங்களை ஒதுக்கி  வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசனையோடு அணு அணுவாக ரசித்து ரசித்து ஜாலியாக வாழ முடிவெடுங்கள் நண்பர்களே.

சுருக்கமாக ஒரு மஹாபாரதம்

 *மகாபாரதம் இதைவிட சுருக்கமாக சொல்ல முடியுமா?  இது, என் மனதை தொட்ட ஒரு பதிவு*👇👇

 

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? 

 

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். 

 

‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? 

 

கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’  

 

பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன. 

 

அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், 

 

“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான். 

 

புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே 

காவி உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது. 

 

“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்து கொள்ளாமல் நீ அந்த போரை அறிந்து கொள்ளமுடியாது.” 

 

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண். 

 

“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.  

 

அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…” 

அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார். 

 

“அது என்ன தத்துவம் ஐயா?  

 

எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…” 

 

“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்” 

 

“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!  

 

கௌரவர்கள் யார் தெரியுமா?” 

“………………..” 

 

“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!” 

“………………..” 

 

“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா? 

“………………..” 

 

“முடியும்…! எப்போது தெரியுமா?” 

 

வருண் மலங்க மலங்க விழித்தான். 

 

“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.” 

 

வருண் சற்று பெருமூச்சு விட்டான். 

 

பெரியவர் தொடர்ந்தார். 

 

“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.” 

 

வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது. 

 

“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?” 

 

“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.  

 

நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது. 

 

அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய். 

 

எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.” 

 

“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.  

 

இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.  

 

கீதையின் பாடமும் இது தான்.” 

 

வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.  

 

களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால். 

 

“அப்போது கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது. 

 

“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே. 

 

உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன். 

 

ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.” 

 

“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?” 

 

வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான். 

 

இப்போது தரையை பார்த்தான். 

 

அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.  

 

அந்த காவிப்பெரியவரை காணவில்லை. 

அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார். 

 

மிகப் பெரிய உண்மை.